இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் முதல் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிதியைப் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் இன்று (18) கையெழுத்திடப்பட்டுள்ளன.
கொழும்பு பொதுத் திறைசேரியில் நடைபெற்ற இந்த ஒப்பந்தக் கைச்சாத்தில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் ADB-யின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஷெனான் கவ்லின் (Shannon Cowlin) ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக 200 மில்லியன் டொலர் கொள்கை சார்ந்த கடன் வசதியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கத்துக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் முன்னதாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
இந்தத் திட்டம் 2025ஆம் ஆண்டின் தேசிய கொள்கைக் கட்டமைப்புடன் இணங்கிச் செல்வதுடன், நிலையான மற்றும் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளாக இருப்பதாகவும், அவை 2026–2028 காலப்பகுதிக்கான பிரதான அரச முதலீட்டுத் திட்டங்களிலும் பிரதிபலிப்பதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய அபிவிருத்தி சவால்களுக்கு திட்டமிட்ட அணுகுமுறை மூலம் தீர்வுகளை வழங்கும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மொத்தம் இரண்டு உப திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அவற்றின் மூலம் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் துறைகளில் தேவையான கொள்கை மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்களை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
200 மில்லியன் டொலர் நிதி வசதி இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் கைத்தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக