நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு உயர் அலை விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (18) மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, புதன்கிழமை (19) மாலை 5.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பரப்புகளில் 2.5 முதல் 3 மீட்டர் வரையிலான உயரமான அலைகள் உருவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருவலையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல்நீர் கரையை நோக்கி புகும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கடற்பரப்புகளில் கடமையில் ஈடுபடும் கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடல் நிலைமை சீராகும் வரை தேவையற்ற கடல்சார் பயணங்களைத் தவிர்த்து, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக