கிளிநொச்சி மாவட்டம் பளை வனப்பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த தகவலில் உண்மை இல்லை எனத் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவல்கள், கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அடிப்படையாகக் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1919ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட குறித்த பகுதியில், 2025ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத காடழிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு இடம்பெற்றதாக அதிகாரிகளின் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தியாகராஜா குணதீபன் என்பவர் குறித்த பகுதியில் முதலில் 10 ஏக்கரும் பின்னர் 20 ஏக்கரும் நிலப்பரப்பை ஆக்கிரமித்து, கற்றாழை மற்றும் காய்கறிச் செய்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று, தற்போது நான்கு மாடிக் கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தக் கட்டடத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தி உள்ளூர் மக்களை இணைத்து ஆடைத் தொழிற்சாலை ஒன்று நடத்தப்பட்டதாகவும், அந்த நிறுவனம் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வனவள திணைக்களம் மற்றும் பொலிஸார் பலமுறை சோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
குறித்த நபர் நீதிமன்றத் தடையை மீறியதாகவும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வனவள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் கைது செய்யப்பட்ட சிலர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அங்கு புலிகளின் பயிற்சி முகாம் இயங்கியதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் போலிச் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக