2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் கட்டாரில் உயிரிழந்த இலங்கைப் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்காக ரூ.80.8 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டஈட்டை தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.
ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் மொத்தமாக ரூ.80,886,895.32 மரண நஷ்டஈடாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மொத்தத் தொகையில், தூதரகத்தின் முயற்சியால் ரூ.13,229,128 நேரடியாக சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எஞ்சிய ரூ.67,657,767.32 உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நஷ்டஈட்டுத் தொகையில் 2023ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த சில வழக்குகளுக்கான தொகைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் சிதாரா கான் மற்றும் அமைச்சர் தர்மசிறி விஜேவர்தன ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, கட்டார் அதிகாரிகள் மற்றும் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றும் சட்ட நிறுவனம் ஆகியோருடன் ஒருங்கிணைந்து நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் மூலம், கட்டாரில் உயிரிழந்த இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் பிரஜைகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பதில் தூதரகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டில் கட்டாரிலிருந்து மொத்தம் ரூ.197,719,710.36 நஷ்டஈடாக மீட்கப்பட்டு, இலங்கையில் உள்ள சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு அந்தத் தொகை வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் உயிரிழக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களது குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுப்பதில் தூதரகங்கள் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக