கொழும்பு துறைமுக நகரில் இளைஞர், யுவதிகளுக்காக சொகுசு படகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், உரிய அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மதுவரித் திணைக்களத்தின் சிறப்புச் செயற்பாட்டுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, உரிய உரிமம் இன்றி மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரண்டு சிற்றுண்டிச்சாலைகள் உள்ளிட்ட மூன்று இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்ட பெருந்தொகையான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி சிறப்புச் செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, 19,500 மில்லிலீற்றர் உள்நாட்டு மதுபானம், 45,400 மில்லிலீற்றர் வெளிநாட்டு மதுபானம் மற்றும் 244,925 மில்லிலீற்றர் பியர் ஆகியவை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மதுவரி சிறப்புச் செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக