சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தொலைபேசியில் தெரிவித்த அந்த நபர், தலைமுடியை மொட்டை அடித்தால் பெண்களுக்கு ரூ.15,000 மற்றும் ஆண்களுக்கு ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
தனது கூற்றை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே சிலர் மொட்டை அடித்து பணம் பெற்றதாகக் கூறி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். இதனை நம்பிய அப்பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் மொட்டை அடித்துள்ளனர்.
மேலும் சிலர் மொட்டை அடிக்கத் தயாராக இருந்த நிலையில், பணம் வழங்குவதாகக் கூறிய மர்ம நபரைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதன் பின்னரே தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மர்ம தொலைபேசி அழைப்புகள், போலியான அரசு அதிகாரிகள் மற்றும் பணம் வழங்குவதாகக் கூறப்படும் தகவல்களை நம்புவதற்கு முன் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக