நண்பர்களை பார்க்கச் செல்வதை மனைவி தடுத்ததாக கூறப்படும் நிலையில், காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் – சவேரியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன், ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் திருமணமாக முடிந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று இளைஞன் நண்பர்களை பார்க்கச் செல்லப் போவதாக தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்து, அவரை தடுத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த இளைஞன், வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அறையின் கதவை திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இளைஞனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் திருமணம் செய்து குறுகிய காலத்திலேயே இளைஞன் உயிரிழந்த சம்பவம், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக