போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் பயணிகளின் இருக்கைகள் தவறாகப் பொருத்தப்பட்டிருக்கக்கூடும் என்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னிட்டு, அவற்றை உடனடியாகப் பரிசோதிக்குமாறு அமெரிக்கக் கூட்டாட்சி வான்வெளி நிர்வாகம் (FAA) உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 453 போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் இந்தப் பிரச்சினை இருக்கக்கூடும் என FAA தெரிவித்துள்ளது. குறிப்பாக அவசர தரையிறக்கத்தின் போது இருக்கைகள் தளர்ந்து நகரவோ அல்லது கழன்று விழவோ வாய்ப்புள்ளதாகவும், இதனால் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், அவசர வெளியேற்றப் பாதைகளும் தடைப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தற்போது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கு மட்டுமே பொருந்தினாலும், உலகின் பிற நாடுகளின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளும் அமெரிக்காவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தங்களது விமானங்களில் இதேபோன்ற பாதுகாப்பு பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த போயிங் நிறுவனம், 2025 டிசம்பர் மாதத்திலேயே விமான நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாகவும், தற்போது FAA அதனை கட்டாய பாதுகாப்பு நடைமுறையாக அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக