தேநீர் உலகம் முழுவதும் அதிகம் விரும்பப்படும் பானங்களில் ஒன்றாக இருந்தாலும், அதனுடன் சேர்த்து சாப்பிடப்படும் சில உணவுகள் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தேநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகின்றன. ஆனால், தவறான உணவுகளுடன் சேர்த்து அருந்தும்போது அதன் ஊட்டச்சத்து பயன் குறைவதோடு, செரிமானக் கோளாறுகள் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி, பயறு, பருப்பு, கீரை போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். தேநீரில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கக்கூடும். எனவே, உணவுக்கு ஒரு முதல் இரண்டு மணி நேரம் இடைவெளி விட்டு தேநீர் அருந்துவது சிறந்தது.
அதேபோல், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், அதிக எண்ணெயில் பொரிக்கப்பட்ட பஜ்ஜி, சமோசா போன்ற நொறுக்குத்தீனிகள், பால் மற்றும் தயிர் சார்ந்த உணவுகள், அதிக காரம் அல்லது அமிலத்தன்மை கொண்ட உணவுகள் ஆகியவற்றையும் தேநீருடன் சேர்த்து சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
இந்த உணவுகள் தேநீருடன் சேரும்போது வயிற்று உப்புசம், அஜீரணம், அமிலத்தன்மை அதிகரித்தல், செரிமான சிரமம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேநீரின் முழுமையான ஆரோக்கிய நன்மைகளைப் பெற, சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான உணவுகளுடன் மட்டுமே அதை அருந்துவது நல்ல பழக்கமாகும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக