கருவாட்டு குழம்பு என்பது கிராமத்து பாரம்பரிய உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நல்லெண்ணெயின் மணமும், மசாலா பொருட்களின் சுவையும் கலந்து தயாரிக்கப்படும் இந்த குழம்பு, சாதம், இட்லி மற்றும் தோசையுடன் சிறந்த இணைப்பாக அமையும்.
தேவையான பொருட்கள்:
கருவாடு, 20 சின்ன வெங்காயம், 2 தக்காளி, 15 முதல் 20 பூண்டு பற்கள், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 மேசைக்கரண்டி மிளகாய் தூள், 1 மேசைக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி வெந்தயம், 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, 5 மேசைக்கரண்டி நல்லெண்ணெய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்.
செய்முறை:
முதலில் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலையை தாளிக்கவும். பின்னர் பூண்டு மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசியாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூளை சேர்த்து நன்றாக கிளறி, புளிக்கரைசலை ஊற்ற வேண்டும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
இதற்கிடையில் மற்றொரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கருவாட்டை இரண்டு நிமிடங்கள் லேசாக வறுத்து, கொதிக்கும் குழம்பில் எண்ணெயுடன் சேர்க்கவும். பின்னர் மேலும் ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், மணம்கொஞ்சும் கிராமத்து சுவையிலான பாரம்பரிய கருவாட்டு குழம்பு பரிமாறத் தயாராகிவிடும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக