2008 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், அவருக்கான தண்டனையை உறுதி செய்துள்ளது.
விசாரணையின் போது, குற்றவாளியிடம் இருந்ததாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வழங்கியதாகக் குறிப்பிடப்படும் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரம், சைனைட் குப்பி மற்றும் சட்டை உள்ளிட்ட பொருட்களை, எதிர்காலத்தில் நிறுவப்படவுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான மதவாச்சி, சியம்பலாகஸ்கட பகுதியைச் சேர்ந்த முஹம்மது உமர் ஹபிதாப், 2019 ஆம் ஆண்டு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் 48 குற்றச்சாட்டுகளில் 31 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் அனைத்தும் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக தனித்தனியாக 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குற்றவாளிக்குச் சொந்தமான சொத்துகளை அரசுடமையாக்கும் உத்தரவும் அமலில் தொடர்கிறது.
2008 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி அனுராதபுரத்தில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முன்னாள் இராணுவ அதிகாரியும் வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி வஜிரா பெரேரா உள்ளிட்ட 31 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த வழக்கில் வழங்கப்பட்ட சமீபத்திய உயர் நீதிமன்றத் தீர்ப்பு, பல ஆண்டுகளாக நீடித்திருந்த சட்ட நடைமுறைக்கு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக