கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற நான்கு சீனப் பிரஜைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுடைய நான்கு சீன வர்த்தகர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் எயார்வேஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தின் வருகை முனையம் ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அவர்கள் கொண்டு வந்த ஆறு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 72,000 சிகரெட்டுகள் அடங்கிய 360 சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி சுமார் 10.8 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக