தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அவற்றின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன ஆகியோரின் பெயர்கள் தொடர்புடையதாகக் கூறப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தகவல்கள் தொடர்பில் இதுவரை நீதிமன்றத்தில் எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
வெளியாகியுள்ள தகவல்களின்படி, பல பில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டம் ஒன்றுக்கான நிதி ஏற்பாடுகள் தொடர்பில் ரகித ராஜபக்ச, தஹம் சிறிசேன மற்றும் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ் ஆகியோருக்கு இடையில் தொடர்புகள் இருந்ததாக விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டர் தனது வர்த்தக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குறித்த முதலீட்டு திட்டத்திற்கான நிதியை விடுவித்த பின்னர், அந்த தொகையை மீளப் பெறுவதற்காக பலமுறை தொடர்புகொள்ள முயன்றதாகவும், இதுதொடர்பாக பல தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள், தொலைபேசி கோபுரங்களின் இருப்பிடத் தகவல்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் ஆதாரங்கள் தற்போது சிஐடி அதிகாரிகளால் ஆராயப்பட்டு வருகின்றன. இத்தகவல்கள் விசாரணையில் முக்கிய ஆதாரங்களாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விசாரணையின் அடுத்த கட்டமாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் தேவையானால் உடலை தோண்டி எடுத்து மேலதிக நீதிமருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக