காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹடுவ பகுதியில் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் பொலிஸாரை தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும், இரு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பியோடியவர்களை துரத்திச் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரை, சந்தேகநபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், சந்தேகநபரின் கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அங்கு வந்த மற்றொரு குழுவினர் அவரை மீட்டுச் சென்று தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தப்பியோடிய சந்தேகநபர், கொலைச் சம்பவம் ஒன்றுக்கு ஆதரவளித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை குறித்த சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்படாத நிலையில், கூர்மையான ஆயுதத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக