அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு – பக்மிட்டியா காட்டுப் பகுதியில், மரப்பொந்திற்குள் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஸ்னைப்பர் (Sniper) துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை விசேட அதிரடிப்படையினர் (STF) மீட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் வழக்கமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த காட்டுப் பகுதியில் விரிவான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அப்போது, பெரிய மரமொன்றின் பொந்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்களில் நீண்ட தூரத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட சில இராணுவத் தர ஆயுதங்கள் காணப்பட்டதாகவும், அவை அனைத்தும் நீண்டகாலமாக காடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததன் காரணமாக துருப்பிடித்த நிலையில் இருந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு தரப்பின் தகவல்களின்படி, இந்த பகுதி உள்நாட்டு யுத்தக் காலத்தில் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசமாகக் கருதப்படுகிறது. இதனால், மீட்கப்பட்ட ஆயுதங்கள் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், ஆயுதங்களின் உண்மையான காலப்பின்னணி, அவை எப்போது மறைக்கப்பட்டன, யாரால் பயன்படுத்தப்பட்டன என்பவை தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. இதனை அறிவியல் மற்றும் தடயவியல் பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகளுக்காக தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
காட்டுப் பகுதியில் மரப்பொந்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பு தரப்பினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக