2008 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா உள்ளிட்ட 31 பேர் உயிரிழந்த வழக்கில், இரண்டாவது குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை இலங்கை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மதவாச்சி, சியம்பலாகஸ்கட பகுதியைச் சேர்ந்த முஹம்மது உமர் ஹபிதாப் என்பவர் இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட 48 குற்றச்சாட்டுகளில் 31 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2019 மே 21 ஆம் தேதி அனுராதபுரம் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றமும் அதே தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
மேலும், குற்றவாளிக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்ற உத்தரவும் நடைமுறையில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தயாரிப்பு கைக்கடிகாரம், சைனைட் குப்பி மற்றும் சட்டை உள்ளிட்ட பொருட்களை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் எதிர்காலத்தில் நிறுவப்படவுள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தனித்தனியாக 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
2008 அக்டோபர் 6 ஆம் தேதி அனுராதபுரத்தில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முன்னாள் மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி வஜிரா பெரேரா உள்ளிட்ட 31 பேர் உயிரிழந்தனர். மேலும், சட்டத்தரணிகள் ஏ.சி.எஸ். ஹமீட், எம். அனூர்தீன், தனுஜா ராஜபக்ச உள்ளிட்ட பலரும் உயிரிழந்ததுடன், பலர் கடுமையாகக் காயமடைந்தனர். தாக்குதல் நடைபெற்ற காலத்தில் ஜனக பெரேரா வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக