இலங்கையின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குப் பொருட்களாக பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான போதைப்பொருட்கள், அவற்றுடன் தொடர்புடைய வழக்குகளின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக எரித்து அழிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பொருட்களாக இருந்த போதைப்பொருட்கள், அரசாங்க இரசாயனப் பரிசோதகர் திணைக்களத்தின் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டிருந்தன. பின்னர் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களின் உத்தரவின் பேரில் அவை புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பிரதேசத்தில் அமைந்துள்ள தகன மையத்தில் எரித்து அழிக்கப்பட்டன.
அழிக்கப்பட்ட போதைப்பொருட்களில் 14 கிலோ 97 கிராம் ஐஸ், 39 கிலோ 710 கிராம் குஷ், 1 கிலோ 2 கிராம் ஹெரோயின், 4 கிலோ 139 கிராம் கஞ்சா மற்றும் ஹஷிஷ், 1 கிலோ 200 கிராம் மெண்டி போதைப்பொருள், 2 கிலோ 30 கிராம் கொக்கைன் மற்றும் 26,262 போதை மாத்திரைகள் அடங்கியிருந்தன.
இந்த நடவடிக்கையை நீர்கொழும்பு மேலதிக நீதவான், அரசாங்க இரசாயனப் பரிசோதகர் அலுவலகத்தின் சிரேஷ்ட பகுப்பாய்வாளர், தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் உதவி பணிப்பாளர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உதவி பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் கண்காணித்தனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக