மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சியினரின் தகவலின்படி, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் வகையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான திருத்த வரைவு பணிகள், மாகாண ஆளுநராக பதவி வகித்த ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முயற்சி சமூகத்தில் பல்வேறு விவாதங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனினும், இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தகவல்கள் குறித்து அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கமொன்றை வெளியிடவில்லை.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக