யாழ்ப்பாணம் செம்மணி சோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள கோயில் பகுதியிலும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இதுவரை கண்டறியப்படாத மேலும் இரண்டு மனிதப் புதைகுழிகள் இருக்கக்கூடும் என மரணதண்டனை கைதியான முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு கோரி தனது மனைவி எஸ்.சி. விஜேவிக்கிரம ஊடாக கடந்த ஆண்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் வெலிக்கடைச் சிறையில் அவரை இரண்டு கட்டங்களாகச் சந்தித்து மேலதிக தகவல்களைப் பெற்றனர். அப்போது ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மற்றொரு கடிதத்தையும் அவர் அதிகாரிகளிடம் கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் இதற்கு முன்பும் பல முக்கிய தகவல்களை வெளியிட்டிருந்தபோதிலும், அவை தொடர்பில் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சுயாதீன குழுவொன்றை நியமித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சிறைச்சாலைக்குள் இருந்து கூடுதல் தகவல்களை வெளிப்படுத்துவது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்றும், தன்னை சுயாதீன சாட்சியாளராக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக