முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையற்றவை என்றும் அவை வெறும் வதந்திகள் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், எவரையும் கைது செய்வது தொடர்பான முடிவுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திரட்டும் சாட்சியங்கள் மற்றும் விசாரணை முடிவுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களில் கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருவதோடு, தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் நோக்கில் அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த முழுமையான விவரங்கள் தற்போது தமக்குத் தெரியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், குற்றவியல் விசாரணைகள் சரியான திசையில் முன்னேறும் போது, சிலர் தங்கள்மீது உண்மைகள் வெளிச்சத்துக்கு வரக்கூடும் என்ற அச்சத்தினால் நீதிமன்றத்தை அணுகும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாது என்றும், எந்த நபருக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகளும் சுயாதீன விசாரணைகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில் காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளுக்கு வெடிபொருட்களை கொண்டு சென்றதாகக் கூறப்படும் லொறி சாரதி ஒருவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், போதிய சாட்சிப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், முக்கிய சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட நபர் முன்வைத்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை உடனடியாக பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் உரிய ஆதாரங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக