வவுனியா மாவட்டத்தின் இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இரண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் “வவுனியா சிங்கித்தி பாதாளய” என்ற பெயரில் காணொளி பரவியதைத் தொடர்ந்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட 7 மாணவர்களை இரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த சிறுவர்களை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை கெபிதிகொல்லேவ சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம், சிறுவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சமூக ஊடக தாக்கம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக