வட மாகாணத்தில் இம்முறை வெசாக் பண்டிகைக் காலத்தில் தன்சல் (அன்னதானம்) வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றுமுழுதாகப் பொய்யானவை என்று வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அடிப்படையற்ற வதந்திகள்: ஆளுநர் செயலகத்தினால் அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இது குறித்து எவ்வித கலந்துரையாடல்களும் கூட நடத்தப்படவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திட்டமிட்ட சதி: எமது சமூகங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவரும் இன, மத நல்லிணக்கத்தைச் சிதைத்து, மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் தீய நோக்குடனேயே சில தரப்பினரால் இவ்வாறான போலிச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
சட்ட நடவடிக்கை: இவ்வாறான காழ்ப்புணர்ச்சி கொண்ட சமூக வலைத்தளப் பரப்புரைகளுக்கு எதிராக, ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் யாரும் இவ்வாறான அடிப்படையற்ற போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், நாட்டில் இன, மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் தொடர்ந்து பேணுமாறும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தனது அறிக்கையில் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக