தேசிய போர் நினைவுத்தூபி வளாகத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக வாக்குமூலம் வழங்க தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தள பதிவின் மூலம், விசேட பொலிஸ் குழுவொன்றினால் தாம் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 18ஆம் தேதி தேசிய போர் வெற்றித் தின ஒத்திகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விமல் வீரவன்ச தலைமையிலான குழுவொன்று நினைவுத்தூபி வளாகத்திற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸாருக்கும் அந்தக் குழுவினருக்கும் இடையே பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, ஒத்திகை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அதிகாரிகளின் கடமைகளிலும் தலையீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், விமல் வீரவன்ச மற்றும் அவருடன் சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் முன்னதாக அறிவித்திருந்தனர்.
நேற்று பொலிஸில் ஆஜராகாத காரணத்தால், இன்று வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக