சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், 40 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பயணிகளுக்கு இலவச வீசா வழங்கும் புதிய திட்டத்தை இலங்கை அரசு இன்றுமுதல் அமுல்படுத்தியுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் பிரஜைகள் இந்த சலுகையை பெற தகுதி பெறுகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயணிகள், 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் இலவச இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) இரட்டை நுழைவு வசதியுடன் பெற முடியும். மேலும், ஆரம்ப 30 நாள் காலத்திற்குப் பிறகும் இலங்கையில் தங்க விரும்புவோர் தேவையான கட்டணத்தை செலுத்தி வீசா நீட்டிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கிய இந்த திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலும் கிடைத்துள்ள நிலையில், சுற்றுலா வருகையை அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக