நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு, அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையைக் கணிசமாக அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலகளாவிய சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரக் காரணிகளின்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையைச் சுமார் 600 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மே 6ஆம் திகதிக்கான தரவுகளின்படி, பெற்றோல் விலையும் குறைந்தது 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், அவ்வாறு செய்யத் தவறினால் இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என எச்சரித்துள்ளார்.
தனநாத் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள முக்கிய கருத்துக்கள் வருமாறு:
பொருளாதார நெருக்கடிச் சுழற்சி: தற்காலிகமாக விலையை உயர்த்தாமல் விடுவது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். ரூபாய் வீழ்ச்சியடைந்தால் அதன் தாக்கமாக எரிபொருள் விலைகள் மீண்டும் உயரும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இந்தத் தவறான சுழற்சிமுறையே காரணமாக அமைந்தது.
மோசமான விளைவு: எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்தை (விலைவாசி உயர்வு) ஏற்படுத்தும் என்பது உண்மையே. ஆயினும், விலையை உயர்த்தாமல் ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடைய விடுவது அதைவிடவும் மிக மோசமான பொருளாதார விளைவுகளை உருவாக்கும்.
டீசல் மானியக் கோரிக்கை: எரிபொருள் விலையை அதிகரிக்கும் அதேவேளை, சமூக மானியத் திட்டம் ஒன்றும் அவசியமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பொதுவாக வழங்கப்படும் எரிபொருள் மானிய முறைகள் பெரும்பாலும் தகுதியற்ற பணக்காரர்களுக்கே பயனளிக்கின்றன. எனவே, இம்முறை பொதுப் போக்குவரத்துச் சேவை மற்றும் குறைந்த வருமானம் பெறும் நலிவடைந்த மக்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இலக்கு வைக்கப்பட்ட பிரத்தியேக டீசல் மானியம் வழங்கப்பட வேண்டும் என்றும் தனநாத் பெர்னாண்டோ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக