நாட்டில் நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடித்துள்ளது.
குறிப்பாக கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் நிலை எச்சரிக்கையும் தொடர்கிறது.
மலைச்சரிவுகள், நிலப்பிளவுகள், திடீர் மண்சரிவுகள் மற்றும் மரங்கள் சரிவது போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால், ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், இரவு நேரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மழை தொடர்ந்தால் சில பகுதிகளில் மக்கள் இடம்பெயர்த்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படலாம் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரித்துள்ளது. குறிப்பாக பள்ளங்கள், மலை அடிவாரங்கள் மற்றும் நீரோடைகள் அருகிலுள்ள மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக