இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, குறிப்பிட்ட ஒரு தனியார் சிங்களத் தொலைக்காட்சி ஊடகத்தின் அரசியல் நிகழ்ச்சிகளில் இனித் தமது கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த அதிரடித் தீர்மானம் குறித்து, செயற்குழு உறுப்பினர் சரித் அபேசிங்க தனது சமூக ஊடகப் பக்கத்தில் விபரங்களை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஊடக வலையமைப்பினால் நடத்தப்படும் அரசியல் விவாதங்களில் பங்கேற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளாலும் ஊடகவியலாளர்களின் அணுகுமுறையாலும் தொடர்ச்சியாக அசௌகரியங்களுக்கு உள்ளாகி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கட்சியின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும், ஒருதலைப்பட்சமான முறையிலும் அந்த நிகழ்ச்சிகள் அமைந்திருப்பதாகக் கருதியே இந்த ‘புறக்கணிப்பு’ முடிவை கட்சித் தலைமை எடுத்துள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் அந்த ஊடகத்தின் விவாத மேடைகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் குரல் ஒலிக்காது என்பது உறுதியாகியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக