அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டிக்கு முன்னதாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது, ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவைக் கண்டதும் ஓடிச் சென்று அவரது காலில் விழுந்து ஆசி பெற முயன்றார். சூர்யவன்ஷியின் இந்த மரியாதைக்குரிய செயலைக் கண்டு நெகிழ்ந்த நெஹ்ரா, அவரைத் தடுத்து நிறுத்தி அன்புடன் கட்டித் தழுவி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு குஜராத் அணிக்கு எதிரான போட்டி என்பது மிகவும் உணர்வுப்பூர்வமானது. கடந்த ஆண்டு இதே அணிக்கு எதிராகத் தான் வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். இந்த ஆண்டும் தனது அதிரடியைத் தொடர்ந்து வரும் அவர், சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டியிருந்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற அண்டர்-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு மகுடம் சூட்டினார். "இரண்டாவது சீசனில் இளம் வீரர்கள் தடுமாறுவார்கள்" என்ற விமர்சனங்களைத் தனது முதிர்ச்சியான ஆட்டத்தால் பொய்யாக்கி வரும் சூர்யவன்ஷி, தற்போது ஐபிஎல் தொடரின் பேசுபொருளாக மாறியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக