இலங்கையிலுள்ள அனைத்து அரசும் தனியார் பாடசாலைகளிலும் மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணும் பெயரில் வழங்கப்பட்டு வந்த உடல் மற்றும் மன ரீதியான தண்டனைகள் முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது.
இந்த சுற்றறிக்கை, அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட அதிகாரிகள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பரிவேணாதிபதிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முன்னைய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகளுக்கு மேலதிகமாக, இப்போது புதிய கட்டுப்பாடுகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, எந்த சூழ்நிலையிலும் மாணவர்களுக்கு உடல் தண்டனை வழங்கக் கூடாது என்பதுடன், அவமதிப்பு, இகழ்ச்சி, மிரட்டல் போன்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் செயல்களும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் கண்ணியத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த சுற்றறிக்கை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பாடசாலை ஒழுக்கம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறி மாணவர்களுக்கு தண்டனை வழங்கும் ஆசிரியர்கள் அல்லது நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது. இதன் மூலம், பள்ளி சூழலில் மாணவர்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் கற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவது முக்கிய குறிக்கோளாகும்.
இந்த புதிய நடவடிக்கை, மாணவர் நலன், மனநலம் மற்றும் மனிதநேய கல்வி முறைகளை முன்னிறுத்தும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக