1972-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 'அப்பல்லோ 17' திட்டத்திற்குப் பிறகு, மனிதர்கள் நிலவை நோக்கிப் பயணிக்கும் வரலாற்று நிகழ்வு நேற்று (ஏப்ரல் 1, 2026) அரங்கேறியுள்ளது. அமெரிக்க நேரப்படி மாலை 6:35 மணிக்கு, புளோரிடாவிலிருந்து நாசாவின் சக்திவாய்ந்த 'ஸ்பேஸ் லோஞ்ச் சிஸ்டம்' (SLS) ரொக்கெட் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள் விண்ணில் பாய்ந்தனர். ஏவுதலுக்கு முன்னதாக 'Launch Abort System' மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகளில் சில சிறிய தொழில்நுட்பப் பிரச்சினைகள் கண்டறியப்பட்ட போதிலும், அவை உடனடியாகச் சீர்செய்யப்பட்டு விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 10 நாட்கள் நீடிக்கவுள்ள இந்தப் பயணத்தின் போது, விண்கலம் நிலவில் தரை இறங்காது; மாறாக நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும்.
ஒரு சிற்றூர்தி (Minibus) அளவிலான சிறிய காப்ஸ்யூலில் தங்களது பயணத்தைத் தொடர்ந்துள்ள இந்த நான்கு வீரர்களும், வரலாற்றில் இதுவரை மனிதர்கள் பூமியிலிருந்து பயணித்திராத மிக நீண்ட தொலைவை அடையவுள்ளனர். 2028-ஆம் ஆண்டு நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நாசாவின் பிரம்மாண்ட இலக்கிற்கு, இந்த 'ஆர்டெமிஸ் II' திட்டத்தின் வெற்றி ஒரு மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. நிலவில் நிரந்தர மனிதத் தளம் அமைப்பதற்கான முதற்கட்டமாக இந்தப் பயணம் சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களால் உற்றுநோக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக