யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி 10-ஆம் திகதி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய அல்ஃபினோ அருள்பாய்ஸ் என்ற சிறுவன் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் நீதி கோரி வரும் சிறுவனின் குடும்பத்தினர், தற்போது தங்களுக்குத் தொடர் அச்சுறுத்தல்கள் நிலவுவதாக முறைப்பாடு செய்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வரும் சில நபர்கள் தங்களை மறைமுகமாகப் பின்தொடர்வதாகவும், அது தொடர்பான ஒளிப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் பிரிவினரே இந்த அச்சுறுத்தல் குறித்தும் விசாரணை நடத்துவது முறையல்ல எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இதில் தலையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், சிறுவன் உயிரிழந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான பிரதான விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கும் பொருட்டு, அதனை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) மாற்றி நடத்துமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக