சர்வதேச கால்பந்து அரங்கில் பெரும் அதிர்ச்சியாக, முன்னாள் சாம்பியனான இத்தாலி அணி 2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள இத்தொடருக்கான பிளேஆஃப் இறுதிப் போட்டியில், போஸ்னியா அண்ட் ஹெர்செகோவினா அணியிடம் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி தோல்வியைத் தழுவியது. முன்னதாக ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. 1934, 1938, 1982 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற இத்தாலி, 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டைத் தொடர்ந்து தற்போது 2026-ஆம் ஆண்டுத் தொடரையும் தவறவிட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பைகளில் பங்கேற்காத முதல் முன்னாள் சாம்பியன் என்ற தேவையற்ற வரலாற்றுச் சாதனையை இத்தாலி பதிவு செய்துள்ளது.
ஜெனாரோ கட்டூசோ தலைமையிலான இத்தாலி அணி, தகுதிச் சுற்றில் நார்வே அணிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும், தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் போஸ்னியா அணியின் பலமான தற்காப்பை மீறி கோல் அடிக்க முடியாமல் திணறியது. கடைசியாக 2014-ல் உலகக் கோப்பையில் விளையாடிய இத்தாலி, கடந்த 12 ஆண்டுகளாகப் உலகக் கோப்பை மைதானங்களைக் காண முடியாமல் தவித்து வருவது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, மற்ற பிளேஆஃப் போட்டிகளில் செக்கியா, துர்கியே மற்றும் ஸ்வீடன் ஆகிய அணிகள் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக