இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில், குறிப்பாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களின் தலைமுடியில் பாதரசத்தின் அளவு மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மட்டத்தில் இருப்பதாகச் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அந்த மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே, நுரைச்சோலை மின் நிலையத்தில் தரம் குறைந்த நிலக்கரியை எரிக்கும்போது வெளியேறும் பாதரசம், வளிமண்டலம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களில் தேங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நுரைச்சோலை, பனியடிய, நாரக்கல்லிய மற்றும் புத்தளம் களப்புப் பகுதிகளில் வாழும் மக்கள் ஏற்கனவே இந்தப் பாதரச நச்சுத்தன்மைக்கு ஆளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை உட்கொள்வதன் மூலம் இந்த உலோகம் உணவுச் சங்கிலி ஊடாக மனித உடலுக்குள் நுழைகிறது. இது ஜப்பானில் வரலாற்று ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய 'மினமாட்டா' (Minamata) நோய் போன்றதொரு பாரிய சுகாதார நெருக்கடியை இலங்கையில் உருவாக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். தரம் குறைந்த நிலக்கரியைச் சார்ந்திருப்பது எதிர்காலத்தில் பாரிய பொருளாதார மற்றும் சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது குறித்துச் சுகாதார அமைச்சு மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக