தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கத்தின் கீழ் எரிசக்தி அமைச்சராகப் பதவி வகிக்கும் குமார ஜயகொடிக்கு எதிராக, 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பாக தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சட்டத்தரணி ஜானக அதிகாரி, கடந்த மூன்று ஜனாதிபதிகளின் (மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க) ஆட்சிக் காலங்களில் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய என்பிபி அரசாங்கத்தின் கீழேயே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
2014 இல் உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக இருந்த போது நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஆட்சியாளரும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக இருக்கும் ரங்க திஸாநாயக்க, முன்னர் ஜே.வி.பி (JVP) சட்டக் குழுவில் இருந்தவர் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், அவரே தனது கட்சியின் சக்திவாய்ந்த அமைச்சருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதித்துள்ளமை அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மையை நிரூபிப்பதாக ஜானக அதிகாரி வாதிட்டுள்ளார். தற்போதைய ஆட்சியில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எவ்வித அரசியல் அழுத்தங்களும் வழங்கப்படுவதில்லை என்பதற்கு இதுவே சான்று என்றும், இந்த வழக்கின் பின்னணித் தகவல்களின்படி அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது எனத் தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக