மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 15 நிபந்தனைகள் அடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தாக்குதல்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் தற்போதைய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத் தவறினால் "இதுவரை உலகம் கண்டிராத" அளவிலான பாரிய இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப் அமைதியையே விரும்புவதாகவும், ஆனால் ஈரானின் பிடிவாதப் போக்கு அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவின் இந்த முன்மொழிவுகளை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி முற்றாக நிராகரித்துள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், மத்தியஸ்தர்கள் மூலம் அனுப்பப்படும் செய்திகளைத் தாண்டி நிரந்தரமான தீர்வையே ஈரான் எதிர்பார்ப்பதாக வலியுறுத்தியுள்ளார். மேலும், ஈரானை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியாது என்றும், அண்டை நாடுகளைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் காரசாரமாகப் பதிலளித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக