இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷர் மாவட்டத்தில் 34 வயதுடைய வினோத் குமார் என்ற இளைஞர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, வினோத் குமார் தனது காதலியைச் சந்திப்பதற்காக அப்பகுதிக்குச் சென்றுள்ளார். இருவரும் முதலில் ஒரு விடுதிக்கும் (Hotel), பின்னர் ஒரு பூங்காவிற்கும் சென்றுள்ளனர். அங்கு இருந்தபோது வினோத்தின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து, அவரது காதலி அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். எனினும், மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியபோது, அந்தப் பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மருத்துவரின் ஆலோசனை இன்றி, பாலியல் செயல்பாடுகளை அதிகரிப்பதற்காக அவர் உட்கொண்ட சில மாத்திரைகளின் வீரியம் காரணமாகவே இந்த உயிரிழப்பு நேரிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வினோத் குமாரின் உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முடிவுகள் வெளியான பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக