இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 08 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களை வெளிக்கொணர்ந்த தமது சங்க அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்திற்கு வழங்கும் தரவு மற்றும் அறிக்கைகளை சமர்ப்பிப்பதை தவிர்க்கவும், தரவு அமைப்புகளை புதுப்பிப்பதை இடைநிறுத்தவும் தீர்மானித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகங்களில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிக்கும் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எனினும், இந்த விவகாரம் தொடர்பான நியாயமான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தாம் தயாராக இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக