யாழ்ப்பாணத்தில் நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று வர்த்தக நிலையங்களுக்கு மொத்தம் ரூ.6.68 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.120 என நிர்ணயிக்கப்பட்ட ஒரு லீட்டர் குடிநீர் போத்தலை ரூ.200க்கு விற்பனை செய்த உணவகம் மற்றும் மதுபான விற்பனையகத்திற்கு ரூ.300,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு சோடா போத்தலை விற்பனை செய்த மற்றொரு உணவகத்திற்கு ரூ.100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையான ரூ.255ஐ விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகருக்கு ரூ.268,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இவ்வாறான சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வேலை நேரங்களில் முறைப்பாடு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக