ஈரான் மீதான போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் விமான எரிபொருளின் (ATF) விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 85% க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா (Air India) மற்றும் இண்டிகோ (IndiGo) ஆகியவை பயணிகளிடம் கூடுதல் எரிபொருள் வரியை வசூலிக்கத் தீர்மானித்துள்ளன. ஏர் இந்தியா மார்ச் 12 முதல் தனது கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், இண்டிகோ நிறுவனம் இன்று (மார்ச் 14) முதல் புதிய கட்டணங்களை அமல்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் இந்தியத் துணைக் கண்டத்திற்கான விமானக் கட்டணங்கள் 425 ரூபா வரையிலும், ஐரோப்பா போன்ற நீண்ட தூரப் பயணங்களுக்கு 2,300 ரூபா வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஏர் இந்தியா தனது சர்வதேச வழித்தடங்களில் தூரத்திற்கு ஏற்ப 10 டொலர் முதல் 200 டொலர் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் சுமார் 40% எரிபொருளுக்காகவே செலவிடப்படுவதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இப்போரின் தாக்கம் தொடரும் பட்சத்தில், வரும் கோடைகால விடுமுறைக் காலத்தில் விமானக் கட்டணங்கள் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக