இளம் பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி அந்தரங்க காணொளிகளை கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (26) பிறப்பித்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலையான காவல்துறை உதவி பரிசோதகர் தெரிவித்ததாவது, சந்தேகநபர் கடந்த மூன்று ஆண்டுகளாக இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
போலி இணைய இணைப்புகள் (phishing links) மற்றும் அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்குள் ஊடுருவி, அங்கிருந்த அந்தரங்க காணொளிகளை பதிவிறக்கம் செய்துள்ளார்.
பின்னர், WhatsApp மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த காணொளிகளை அனுப்பி, மேலும் காணொளிகளை வழங்குமாறு மிரட்டியுள்ளார்.
அவ்வாறு வழங்கத் தவறினால், ஏற்கனவே தன்னிடம் உள்ள காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
2023ஆம் ஆண்டு களுத்துறை மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
அடையாளம் காண முடியாத தொலைபேசி இணைப்புகள் மற்றும் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி திட்டமிட்ட முறையில் குற்றச் செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் Facebook நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தொழில்நுட்ப தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரின் மனநிலை குறித்த முழுமையான மருத்துவ அறிக்கையைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இணைய வழி குற்றங்கள் குறித்து மீண்டும் விழிப்புணர்வு தேவைப்படுவதை வெளிப்படுத்துகின்றது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக