காலி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விசாரணை, காலி திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு வெளியே கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில், ஒருவர் தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் கூறி, பொலிஸ் நிலையத்திற்குள் அமைதியற்ற முறையில் நடந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, குறித்த முதியவர் நேற்று (24) இரவு மதுபோதையில் வீதியில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், இதன் காரணமாக அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யும் போது குறித்த நபர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அவ்வாறு முயன்றபோது கீழே விழுந்ததால் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்கான அடையாளங்கள் காணொளியில் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர், குறித்த நபர் நேற்று (25) பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் பலப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளியின் உண்மைத் தன்மை மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக