யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் பலாலி மற்றும் குரும்பசிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காணிகளை மீளளிப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (25) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பலாலி மற்றும் குரும்பசிட்டி பகுதிகளில் உள்ள விவசாய மற்றும் குடியிருப்பு காணிகள் உடனடியாக மீளளிக்கப்படவுள்ளதாகவும், மக்கள் தங்களுடைய காணிகளில் வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான முழுமையான அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1981 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவதுடன், அந்தக் காணிகளை பயன்படுத்த முடியாமல் போன காலத்திற்கான கூடுதல் நஷ்டஈடும் வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் தேவையான 13,000 வீடுகளையும் முழுமையாக கட்டி முடித்து, "மீள்குடியேற்ற வீடுகள்" என்ற நிலை நாட்டின் வரலாற்றில் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் காணி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணி விடுவிப்பு தொடர்பில் போராட்டங்களை முன்னெடுத்து, தங்களுடைய போராட்டங்களாலேயே காணிகள் விடுவிக்கப்பட்டதாக காட்டுவதற்கு சில தோல்வியடைந்த அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது காணி விடுவிப்பு குறித்து பேசுவதற்கு தயக்கம் காட்டிய சில தமிழ் அரசியல்வாதிகள், தற்போது அரசாங்கம் காணி விடுவிப்பை உறுதி செய்துள்ள நிலையில் போராட்டங்களை அறிவித்து அரசியல் நாடகம் நடத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இவ்வாறான அரசியல்வாதிகளின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மக்கள் இனிமேலும் பகடைக்காய்களாக மாறமாட்டார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக