பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வைத்தியர் நேற்று (23) காலை வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், அதன் பின்னர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியரைத் தேடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவரது கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணித்தமை மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்தியரின் கார் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வைத்தியரின் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியை மையமாகக் கொண்டு, அவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று அந்தப் பகுதியில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர் காணாமல் போனதற்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக