இறுதிப் பரீட்சையில் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், தமக்கும் பட்டம் வழங்கப்பட்டமை தொடர்பில் விளக்கம் கோரி கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றில் நட்டஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட குழுவினரிடமிருந்து 50 இலட்சம் ரூபாய் நட்டஈடு பெற்றுத்தருமாறு கோரி சஹான் குமார் அத்துகோரல என்ற மாணவர் நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
மாணவர் தனது மனுவில், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் மற்றொரு மாணவர் ஊடாக தம்மிடம் 80,000 ரூபாய் பணம் கோரியதாகவும், அதனை வழங்க மறுத்ததன் பின்னர் பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தாம் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தம்மையும் மேலும் சில மாணவர்களையும் திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சையில் தோல்வியடையச் செய்ததாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனினும், அதன் பின்னர் மீண்டும் எந்தவொரு பரீட்சையும் நடத்தப்படாத நிலையில், ஆரம்பத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட தாம் உள்ளிட்ட சில மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறுதிப் பரீட்சையில் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்ட சில மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் நடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மீண்டும் பரீட்சை நடத்தப்படாத நிலையில், ஆரம்பத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் எவ்வாறு சித்தியடைந்ததாக அறிவிக்கப்பட்டனர் என்பது தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய போதிலும், இதுவரை தெளிவான பதில் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையின் மூலம் பரீட்சை நடைமுறையில் முறைகேடு இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகம் எழுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தினால் நடத்தப்பட்ட 2022/2023 கல்வியாண்டுக்கான தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேலாண்மை உயர் டிப்ளோமா பாடநெறியைப் பயின்ற மாணவர் சார்பில், சட்டத்தரணி தனோஷா பெரேரா ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக