வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்கள் தொடர்பில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘இந்திரன்’ மற்றும் கந்தையா பாஸ்கரன் போன்றோர் முன்னெடுத்த நிகழ்வுகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் மற்றும் கடுமையான விமர்சனங்கள், தமிழர் பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ‘ஊடறுப்பு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் திரைமறைவுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு தேவையான அரசியல் உறுதித்தன்மை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போதுமான அளவில் இல்லாததே முதலீடுகள் தவிர்க்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஊழல் மற்றும் பல்வேறு குழுக்களின் அச்சுறுத்தல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட உண்மையான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தமிழகம் மற்றும் தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களைப் போன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் ஊழலற்ற அரசியல் கலாச்சாரத்தையும் புதிய தலைமைத்துவ மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக