மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தால் விவசாயத் துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் பொருத்தமான பயிர்ச்செய்கைத் திட்டமிடல் தொடர்பாக ஆராய்வதே இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது.
2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளிலும் எல் நினோ காலநிலை தாக்கம் தொடரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தேசிய மட்டத்திலும், மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களிலும் பல்வேறு முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வட மாகாண அளவில் ஏற்கனவே விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை மற்றும் தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டிருந்தது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்தின் நில அமைப்பு, காலநிலை மற்றும் நிலப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தனித்துவமான விவசாயத் திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மன்னார் மாவட்டத்திற்கான முதலாவது விசேட மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, எதிர்வரும் காலநிலை சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கான மாவட்ட மட்ட நடவடிக்கைகள் மற்றும் விவசாயத் திட்டமிடல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக