இலங்கையில் நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக பல பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அண்மைய நாட்களில் அடிக்கடி காட்டுத்தீ பதிவாகி வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திம பாலமகும்புர வெளியிட்ட தகவலின்படி, இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமின்றி அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நக்கிள்ஸ் வனப் பகுதியின் ஹுன்னஸ்கிரிய பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவியிருந்த காட்டுத்தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உலகளாவிய காலநிலை மாற்றமான 'எல் நினோ' (El Niño) தற்போது இலங்கையின் வானிலை அமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சர்வதேச காலநிலை முன்னறிவிப்புகளின்படி, தற்போது பலவீனமாக காணப்படும் எல் நினோ நிலைமை, எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை 80 சதவீதத்திற்கும் அதிக வாய்ப்பில் தீவிரமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பநிலை அதிகரிப்பு, வறட்சி மற்றும் காட்டுத்தீ அபாயம் மேலும் உயரும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனையடுத்து, வனப் பகுதிகளில் தீ மூட்டுதல், எரியும் சிகரெட் துண்டுகள் அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்களை வீசுதல் போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்குமாறும், காட்டுத்தீ தொடர்பான எந்தவொரு சம்பவமும் காணப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் வனப் பாதுகாப்புத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இயற்கை வளங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்காக அனைவரும் அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக