பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கை மூடிமறைக்க முக்கிய பங்கு வகித்ததாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டை, இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ளார்.
அவரது குற்றச்சாட்டின்படி, தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் அரசியல் தலையீட்டின் காரணமாக திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டதாகவும், அதில் பிரசாத் ரணசிங்க முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அவருக்குப் பின்னால் இருந்த செல்வாக்கு மிக்க தரப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரசாத் ரணசிங்கவும் அவரது மனைவியும் நாட்டைவிட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளார். இதனால், விசாரணை நிறைவடையும் வரை அவருக்கு உடனடியாக வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், அவரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணைகளின் போது பிரசாத் ரணசிங்க கைது செய்யப்பட்டிருந்த போதிலும், பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க அரசியல் தலையீடு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை மூடிமறைக்கும் நடவடிக்கைகளில் சில மூத்த பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 டிசம்பர் 15ஆம் தேதி தினேஷ் ஷாப்டர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் அவரது மரணம் கொலை என நீதிமருத்துவ விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், இந்த வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக உரிய முன்னேற்றமின்றி நீடித்து வந்ததாகவும், 2022 முதல் 2026 வரை பல முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வழக்கின் விசாரணையை திசைதிருப்பியவர்கள், பொய்யான ஆவணங்கள் தயாரித்தவர்கள் மற்றும் தவறான சாட்சியங்களை உருவாக்கியவர்கள் எனக் கூறப்படும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக