திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பகுதியில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் (STF) முன்னெடுத்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உப்புவெளி மின்சார நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர்களின் வசமிருந்து ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருள் மற்றும் பல கூர்மையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான ‘கெம்பா’விடமிருந்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டு கூர்மையான வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து 8 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து 7 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இந்தக் குழுவினர் திருகோணமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல குற்றவியல் வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருப்பதாகவும், அவை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக