கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹாட்-உலே மற்றும் சோபோ ஆகிய இரண்டு புதிய மாகாணங்களுக்கும் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தற்போது கொங்கோவில் பதிவாகியுள்ள எபோலா தொற்றின் 17ஆவது அலை தொடர்ந்துவருவதாகவும், இதுவரை நாடு முழுவதும் 1,926 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 702 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
எபோலா வைரஸ், பாதிக்கப்பட்ட மனிதர்கள் அல்லது விலங்குகளின் உடல் திரவங்கள் மூலம் நேரடியாக பரவக்கூடிய ஆபத்தான தொற்றுநோயாகும். கடுமையான காய்ச்சல், வாந்தி, உட்புற மற்றும் வெளிப்புற இரத்தக்கசிவு உள்ளிட்ட தீவிர அறிகுறிகளை இந்த வைரஸ் ஏற்படுத்தக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
புதியதாக தொற்று பதிவான ஹாட்-உலே மற்றும் சோபோ மாகாணங்களில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் பெரும்பாலும் அண்டை மாகாணமான இத்தூரியிலிருந்து வந்திருந்தாலும், நோய் பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அந்த இரண்டு மாகாணங்களும் எபோலா தொற்று மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு இல்லாதது கண்டறியப்பட்டுள்ளதால், அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள எண்ணிக்கையை விட எபோலா பாதிப்பு இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக